கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 15 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை இணைந்து முன்னெடுத்த சுத்தப்படுத்தும் நிகழ்வின் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பு உள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம் ராபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பொலிஸ், விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.