-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் கிண்ணியா தள வைத்தியசாலை ஊழியர்கள், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
தங்களுக்கு தூர இடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு செல்ல முடியாது எனவும் தமக்கு கிண்ணியா பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“உயிர் காக்கும் போது முன்னிலையில், பெற்றோல் வரிசையில் பின்னிலையில்”, “வழங்கு வழங்கு பெற்றோல் வழங்கு” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனியுடன் கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இதேவேளை, குறித்த மகஜரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதாகவும், பிரதேச செயலாளர் இதன் போது குறிப்பிட்டார்.


