கேகாலை – மேல் கொஸ்கம, புஸ்ஸல்லாவ ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை – நுககஹவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான செபாலகே மல்லிகா சமன்மாலி (வயது – 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாகவும், காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவரைத் துரத்திச் சென்ற ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.