எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், மிகுதி 10 சதவீதத்தினை லங்கா ஐஓசி நிறுவனமும் பூர்த்திசெய்கின்றது.
தற்போது, நாடு எதிர்நோக்கியுள்ளது அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்வது சவாலுக்குரிய செயற்பாடாகியுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் உள்ள பெற்றோலிய வள நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இலங்கையின் அந்நிய செலாவணி தொடர்பான சிக்கல்கள் ஏற்படாதவாறு எரிபொருள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது பொருத்தமானது என கண்டறியப்பட்டது.
அதற்கமைய, முறைசார் பொறிமுறையின் கீழ் எரிபொருள் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி பங்கீடு மற்றும் விநியோகம் செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க மின்சக்தி மற்றும் வலுசக்தி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.