-மன்னார் நிருபர்-
இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 450 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு இருவரை வனத்துறை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இருமேனி பகுதியில் இருந்து முச்சக்கரவண்டியில் கடல் அட்டை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முச்சக்கரவண்டியில் கொண்டுவரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.
இதன் போது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி, ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.