இரு குடும்பங்களுக்கிடையே தகராறு : மண்வெட்டியால் தாக்குதல்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு வீட்டார்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினால், மண்வெட்டி தாக்குதலுக்கு உள்ளான நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இக்கைகலப்பில் திருகோணமலை-04ம் கட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாத் சந்தன (38 வயது) என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த நிமால் பேமசிறி ( 58 வயது) என்பவரை கைது செய்து, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தாக்குதலினால் காயமடைந்த நபர் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் கடமை நேர வைத்திய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.