கொழும்பு IDU மருத்துவமனையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா? என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பில், சுகாதார அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை மாதிரிகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நோயாளிகள் உயிரிழப்பதற்கு முன்னரே ‘ஒண்டான்செட்ரான்’ தடுப்பூசியின் 4 தொகுதிகளை (Batches) வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
அத்துடன், இந்த மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்த மருந்தின் ஏனைய அனைத்து தொகுதிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த உற்பத்தி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய 10 மருந்து வகைகளையும் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயத்தில் சம்மந்தப்பட்டு தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (IDU) டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 வயது யுவதி உட்பட இரண்டு உயிரிழப்பகள் பதிவாகியுள்ளன.
சாண்டுமினி திவ்யாஞ்சலி என அடையாளம் காணப்பட்ட குறித்த யுவதி இந்த மாத தொடக்கத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு IDU இல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய குறித்த மருந்து வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டதாக அவரது தந்தை துஷாரா கும்பலதாரா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஊசி போட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது, திடீர் காய்ச்சல், குளிர் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார். அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார், ஆனால் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்தார், என தெரிவித்தார்.
‘மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்தில் ஏதோ தவறு நடந்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், என்ன நடந்தது என்பதை விளக்கும் எந்த அறிக்கையும் எங்களிடம் இன்னும் இல்லை’ என்று அவரது தந்தை கூறினார்.
வாந்தியைக் கட்டுப்படுத்தப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாந்தி எதிர்ப்பு மருந்தான ஒன்டான்செட்ரான் செலுத்தப்பட்ட நோயாளிகளில் சாண்டுமினியும் ஒருவர் என்பதை சுகாதார அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
பின்னர் அதே மருந்து செலுத்திய 37 வயது பெண் ஒருவரின் உயிரிழப்பு இரண்டாவதாக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்தா ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள மருத்துவமனைகளில் பல நோயாளிகள் கடுமையான ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘அவள் குணமடைய மருத்துவமனைக்குச் சென்றாள், அவள் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்’ என உயிரிழந்த யுவதி சாண்டுமினி திவ்யாஞ்சலியின் தந்தை தெரிவித்துள்ளார்.