-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியானது அண்மையில் காபட் இடப்பட்டு வீதி அமைக்கப்பட்டிருந்தது
இதன் இடை நடுவில் சுமார் 100 மீற்றர் தூரம் அளவில் கல்வெட்டுக்கான இணைவெளியில் வீதி செப்பனிடப்படாமையால் பாரிய பள்ளதாக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் ஊடாக பயணிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர் கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியானது கடந்த கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் சுபீட்சத்தின் பார்வையின் கீழ் ஒரு இலட்சம் வீதிகளை அமைத்தல் எனும் திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆனாலும் தற்போது திருப்தியற்ற நிலை காணப்படுகிறது.
இவ் வீதியானது 3000மீற்றர் நீளம் கொண்டது இதன் ஊடாக நாளாந்தம் பலர் பயணிக்கிறார்கள் வைத்தியசாலை, பாடசாலை, அலுவலக தேவை என பல நூற்றுக்கணக்கான மக்கள் இவ் வீதியையே பயன்படுத்துகிறார்கள் பல வருட காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்ட இவ் வீதி, தார் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் இடை நடுவில் சிறிய மதகுக்கான அபிவிருத்தி திட்டம் நடை முறைப்படுத்தப்படவில்லை .
மாரி மழை காலங்களில் இதன் ஊடாக முற்றாக பயணிக்க முடியாத நிலை ஏற்படும் வெள்ள நீர் இதன் ஊடாகவே பாய்வதனால் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் வீதியின் இருபுறமும் வயல் நிலங்களாகையால் விரைவு செப்பனிட வேண்டிய தேவை உள்ளது.
இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அலுவலகம், திருகோணமலைக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இப் பால புனரமைப்பு பணி கைவிடப்பட்டுள்ளதாகவும், இவ் வீதிக்கான மொத்த ஒதுக்கீடு 90,686,482.38 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த செலவு 70,0666,181.07 ரூபாவாக காணப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் இவ்வாறு பல இலட்சம் ரூபா செலவு செய்து காபட் இடப்பட்ட வீதியின் முழுமையான பூரணமற்ற நிலை பல மாத காலமாக காணப்படுவது, அபிவிருத்தியில் திருப்தியற்றதும் மக்களின் சீரான போக்குவரத்துக்கான திருப்தியற்ற நிலையும் காணப்படுகிறது.
மேலும், இவ் வீதிக்கான பெயர் பலகை இடப்படாமையும் குறைபாடாக உள்ளது, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.