ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல் குறித்து அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாகத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த எண்களைப் பயன்படுத்தி இம்மோசடி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக +94115226126, +0115226126 , 0771167739, 0742756098 ஆகிய இலக்கங்கள் குறித்து பொதுமக்கள் அதீத அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மோசடியாளர்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையைப் (State Emblem) பயன்படுத்திப் போலி கைபேசி செயலி (Mobile App) ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
டிஜிட்டல் அடையாள அட்டை (Digital Identity Card) அல்லது மின்-தேசிய அடையாள அட்டைக்காக (e-NIC) விபரங்களைப் பதிவு செய்வதாகக் கூறி, இச்செயலிகள் ஊடாகத் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட https://drpgov-lk[.]com என்ற போலி இணையதளம் ஊடாகவும் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
ஆட்பதிவுத் திணைக்களம் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள், செயலிகள் அல்லது இணையதளங்கள் ஊடாகத் தனிப்பட்ட விபரங்களைப் பதிவு செய்யும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணையதளங்களுக்கு உங்களது விபரங்களை வழங்குவதையோ அல்லது நிதித் தகவல்களைப் பரிமாறுவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.