அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் கைது

வட்டுக்கோட்டை-அராலி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் வட்டுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த சில நாட்களாக வசித்து வருகின்றார்.

அந்த நபரும் வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவருமென மொத்தமாக மூவர் குறித்த பாடசாலையின் மதில் பாய்ந்து உள்ளே சென்று அதிபருடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த பழைய மாணவர்கள் அவ்விடத்திற்கு வந்தவேளை இருவர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் பழைய மாணவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்ட நபர் நையப்புடைக்கப்பட்ட பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று மாலை மற்றைய சந்தேக நபர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.