![](https://minnal24.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-07-at-9.02.54-AM.jpeg)
பாடசாலை மாணவர்கள், பெற்றோர் போராட்டம்: மடு வலய கல்விப் பணிப்பாளர் குறித்து விசனம்
-மன்னார் நிருபர்-
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்கள், பெற்றோர்,கிராம மக்கள் இணைந்து போராட்டம் செய்துள்ளனர்
பாடசாலைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை காலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மடு வலய கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கை என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியமிக்கும் ஆசிரியர்களுக்கு இணைப்பை வழங்கினால் பாடசாலை நடாத்துவது எப்படி,நிரந்தர ஆசிரியர்கள் எப்போது தருவீர்கள்? உடனடி தீர்வு வேண்டும்., கல்விக்கான உயர் அதிகாரிகளே பதில் கூறுங்கள்,எமது கிராமங்களின் கல்வி அடையாளமே எமது பாடசாலை.அதை அழிக்க வேண்டாம்,எமது பிள்ளைகளின் எதிர்காலம்?,ஆரம்பக் கல்வியே அஸ்திவாரமாகும்,புதிய அதிபர் எங்கே?,உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த வீதியூடாக பயணித்த மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்