பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்

பரீட்சையில் சித்தியடையாத மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா ஆங்கில பாடசாலையில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சமீபத்தில், அவர் தனது பத்தாம் தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. எல்லா பாடங்களிலும் சித்திபெறாமல் அபிஷேக் 600இற்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

இருப்பினும், அபிஷேக் பத்தாம் தர பரீட்சையில் தோல்வியடைந்த பிறகு, அவரது பெற்றோர் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக் வெட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், ‘நீ பரீட்சையில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது” என்று ஊக்கப்படுத்தினர்.

பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். ‘நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் பரீட்சை எழுதுவேன். நான் பரீட்சையில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்” என்று அபிஷேக் ஊடகத்திடம் தெரிவித்தார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்