“த.ம.வி.புலி கட்சி வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்” : பிரதிச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிப்பு

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பிள்ளையானை கைது செய்யப்போவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் கட்சிக்கும் தொடர்பு என ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்பியதன் மூலம் சுமார் 437 வாக்குகளால் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி எந்த ஆசனமும் பெறமுடியாத நிலை ஏற்பட்டது எனவும் , குறித்த பாணியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் எமது கட்சிக்கு எதிராக போலியான பரப்புரைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்து , “திட்டமிட்ட தோர்தல்கள் வன்முறை தொடர்பாக” என்று தலைப்பிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் யோகராஜா சந்திரகுமார் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள், முற்போக்கு தமிழர் கழகம், தமிழர் ஐக்கிய முன்னனி இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக இணைந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகுச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைய எமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதும் கடந்த 25.03.2025ஆம் திகதி முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் வியாழேந்திரனும் 08.04.2025ஆம் திகதி தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இக்கைதுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுவதோடு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் ஏனைய அரசியல் கட்சி பிரமுகர்கள் இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் ஊடகங்கள், யூட்டியுப்பர்ஸ், சமூக வலையத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தாங்கள் நினைத்தபடி நினைத்த வழக்குகளுடன் தொடர்புபடுத்துவதோடு குறிப்பாக நாம் வாக்கு கேட்கும் பிரதேசத்தின் வாக்காளர்களை இலக்கு வைத்து (தமிழர்கள், கிறிஸ்தவர்கள், அரச அதிகாரிகள்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல், விடுதலைப் புலிகளின் போராட்டத்தினை முடக்கியது, அரச அதிகாரிகளை கடத்தியமை, இலஞ்சஊழல் என போலிப்பிரச்சாரங்களை செய்து எமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி எமக்கான வாக்காளர்களை குழப்பி வாக்கு சரிவை ஏற்படுத்தும் தேர்தல் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் குற்றவாளிகள் மீதான விசாரணை முன்னெடுக்கப்படுவதா? அத்தோடு பொலிஸாரின் விசாரணைக்கு முன்னர் அரசியல் பிரமுகர்களுக்கும் ஆளும் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் மேடையில் பேசக் கூடிய அளவிற்கு தகவல்களை வழங்குவது யார்? எனவே இவை அனைத்தும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எமக்கான வாக்குகளை சரியச் செய்து ஒரு சாராரை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்கான தேர்தல் சட்டங்களுக்கு முரணான தேர்தல் வன்முறையாகும்.

தேர்தல் காலங்களில் ஊடகங்களையும் தேர்தல் வன்முறைகளையும் கையாண்டு சீர்படுத்த வேண்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவாகும். ஆனால் இத்தேர்தல் அடக்கு முறைக்கு எதிராக எமது கட்சியினால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்க தவறியுள்ளது என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கின்ற போது இவ்வாறான நீதியான தேர்தல் நடைபெறாத சூழலில் சுயாதீனமாக மக்களால் வாக்களிக்கவோ எம்மால் வாக்கு கேட்கவோ முடியாதுள்ளது. நாளாந்தம் ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் கட்சியின் தலைவரை கைது செய்து விட்டார்கள் இன்னும் 18 பேரை கைது செய்யப் போகின்றோம் கட்சியின் அவரை கைது செய்யப்போகின்றோம், இவரை கைது செய்யப் போகின்றோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் அச்சுறுத்தும் நிலை கடந்த 08.04.2025ஆம் திகதியிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. இது எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்ய முடியாத அளவிற்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்துவதுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்குறித்த தேர்தல் சட்டதிட்டங்களை சரிவர தாங்கள் நடைமுறைப்படுத்த ஆவன செய்யாதவிடத்து தேர்தலில் போட்டியிட முன்வந்த எமது வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருவதுடன் , இவ்விடயம் தொடர்பாக தங்களின் உரிய நடவடிக்கையினை விரைவில் எதிர்பார்க்கின்றேன் என, தமிழ் மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.