
துவிச்சக்கர வண்டியுடன் மோதிய லொறி: ஒருவர் பலி
புத்தளம், கருவலகஸ்வெவ – நவகத்தேகம வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கருவலகஸ்வெவயில் இருந்து நவகத்தேகம நோக்கி பயணித்த லொறி துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.