தடை உத்தரவு வழங்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதி கிடையாது : கல்முனை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு

-அம்பாறை நிருபர்-

கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து கல்முனை நீதிவான் நீதிமன்றத்தால் ஆலோசனையுடன் மன்றில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு மீள் நகர்த்தல் முறை விண்ணப்பம் மூலம் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சட்டத்தரணிகளான நடராஜா சிவரஞ்சித், ரி.மதிவதனன், றிபாஸ் ஆகியோர் இதனை மீள் தாக்கல் செய்திருந்தனர்.

அதனை ஏற்ற நீதிவான் சம்சுதீன் விசாரணை செய்து பரிசீலனைக்கு உட்படுத்தினார்.

பெரியநீலாவணைப் பொலிஸ் பொறுப்பதிகாரி வாதங்களை முன்வைத்தார்.

அதற்கு எதிராகச் சட்டத்தரணிகளான நடராஜா சிவரங்சித், ரி.மதிவதனன்  மற்றும் றிபாஸ் ஆகியோர் தலையிட்டு நியாயமான வாதங்களை முன்வைத்தார்கள் .

அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் சம்சுதீன்,

‘பொதுமக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் வராத வகையிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பதாகைகளை சின்னங்களைக் காட்சிப்படுத்தாமல் தங்களது மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை யாரும் தடை செய்ய முடியாது, எனவே, அமைதியாக நினைவேந்தலைச் செய்யலாம்’ என்று நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

கல்முனை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர் வரும் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு முள்ளிவாய்க்கால் நினை வேந்தலை நடத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் விநாயகம் விமலநாதன் ஆகியோருக்கு எதிராக பெரிய நீலவணை போலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி தொடர்பான தடை உத்தரவில் ஆஜராகி இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனுக்கும் தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்டு, பொதுமக்கள் சார்ந்த எந்த ஒரு நினைவேந்தல் நிகழ்வினையும் நிகழ்த்த முடியும் எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்த முடியாது எனவும் நினைவு கஞ்சி வழங்குவது தொடர்பாக போலீசாருக்கு தடை உத்தரவு வழங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கருணாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேற்கூறிய இவ்விரு நீதிமன்றத்திலும் கடந்த கால யுத்தத்தில் இறந்த உறவுகளை நினைவு கூறுவது தொடர்பாக சட்டத்துக்கு முரண் அற்ற வகையில் நினைவு கூறுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்