கடற்படையினரால் கடற்கரையோரங்களில் கழிவுகள் அகற்ற நடவடிக்கை

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கண்ணாடி போத்தல் கழிவுகள் பரவலாக காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் சிரமதானம் என்ற பெயரில் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் கல்முனை பகுதியில் அமைந்துள்ள கடற்படை ஸ்ரீ லங்நா நௌ தீகாயு கடற்படை முகாம் படையினர் வெள்ளிக்கிழமை தோறும் இவ்வாறு கடற்கரைப்பகுதியில் தேங்கி காணப்படுகின்ற பிளாஸ்டிக் வகை கழிவுகள் கண்ணாடி போத்தல் வகைகள் டின் வகை கழிவுகளை உரப்பையில் சேகரித்து குறிப்பிட்ட பகுதிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த காலங்களில் வெட்டப்பட்ட நிலையில் இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரை ஒதுங்கி நிறைந்து காணப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை , பாண்டிருப்பு , கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு , உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு அடையாளங்கள் தென்பட்டுள்ளன.

இவ்வாறான கழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி பல்வேறு சிரமங்களை மீனவ சமூகமம் முகம் கொடுத்திருந்தனர்.

இதனை அடுத்து வெள்ளிக்கிழமை தோறும் படிப்படியாக கனரக வாகனத்தின் உதவிகளுடன் கடற்படையினர் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்