ஊஞ்சல் கயிறு இறுகி சிறுவன் பலி

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் – பாலத்தோப்பூர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தோப்பூர் – பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த மர்சூன் அஷ்பாக் (வயது – 8) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகி உள்ளதாகவும் அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாமையினால் சிறுவன் உயிர் இழந்திருப்பதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று வியாழக்கிழமை இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்