
உதவி அதிபரை கடத்தி தாக்குதல் நடத்திய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது
கம்பஹா – பியகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உதவி அதிபரை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியம்பலாப்பேயைச் சேர்ந்த 37 மற்றும் 32 வயதுடைய தம்பதியினரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பியகம, சியம்பலாப்பேயில் உள்ள கோவிலுக்கு அருகில் பாதிக்கப்பட்டவரை ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்று வீடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தாக்குதலுக்குள்ளானவர் உதவி அதிபர் எனவும் சந்தேக நபர்களில் ஒருவர் அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த கடத்தல் இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறில் இருந்து தோன்றியதாக தெரிய வந்துள்ளதுடன் பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.