
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சார்ஜெண்ட் பணி இடைநீக்கம்
காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பொலிஸ் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், பொதுமக்களை ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை தெரிவித்ததாக, குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் டி.எம். அமரதாச எனும், பொலிஸ் சார்ஜென்ட் கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த புதுவருட தினத்தில் (14) காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பொலிஸ் சார்ஜெண்ட் அடுத்த நாள் (15) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.