அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு!

-அம்பாறை நிருபர்-

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட, அம்பாறை-மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள், பல நாட்களாக ஒளிராமல் இருப்பதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.

தற்போது அடை மழை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள நிலையில், இப்பகுதி  இவ்வாறு இருளில் முழ்குவதால், வீதியில் செல்லும் வாகனங்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது தவிர, இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதனால், மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி சியாரம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள்,  இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒளிந்த பின், மீண்டும் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒளிராமல் காணப்படுகின்றது.

மழை அதிகரிக்கும் போது, வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால், பாம்பு, முதலை, ஆமை போன்றவைகளின் அச்சுறுத்தலும் இங்கு ஏற்படுகின்றது.

எனவே,  இவ்வீதியின் மின்விளக்குகள் தொடர்ந்தும் ஒளிர்வதற்கு, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அம்பாறை -காரைதீவு-மாவடிப்பள்ளி பிரதான வீதியில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை, குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்