அரச காணியில் சட்டவிரோத மண்அகழ்வு : மூவர் கைது!

-மூதூர் நிருபர்-

சம்பூர் பொலிஸ் பிரிவின் நல்லூர் பகுதியில், அனுமதி பத்திரம் இன்றி அரச காணியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட, இரண்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் பெக்கோ இயந்திரத்தை சம்பூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்தோடு சாரதிகள் மூவரையும் கைது செய்துள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் அரச காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக, சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும், எதிர்வரும் திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி