
மட்டக்களப்பு திருகோணமலை கரையோரப் பகுதிகளுக்கு கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 21-ம் திகதி வரை ஆழ்கடல் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழில் சமூக மக்கள் அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டி தமிழகத்தை நோக்கி நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை மறுநாள் திங்கட்கிழமை நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.
மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.