முன்னாள் உபவேந்தர் தாக்குதல் சம்பவம் : விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் இன்று சனிக்கிழமை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கூறப்படும் குறித்த குழுவினர் பேராசிரியர் தங்கியிருந்த இல்லத்தையும் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர்.

பின்னர் பேராதனை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், காயமடைந்திருந்த பேராசிரியரை சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும் அவரது மகனை கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டது

மாணவர் குழுவொன்றுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.