தனுஷ்க குணதிலகவின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவர் தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற சிட்னி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் கிளாரி பெர்னான் அனுமதி அளித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே அவர் சார்பில் நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

குணதிலகவுக்கு உதவ முன்வந்த ஒருவரின் வீட்டில் வசித்து வரும் குணதிலகவை புதிய வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறும் சட்ட நடவடிக்கைகள் மிக நீண்டதாக இருக்கும் என்றும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

அந்த கோரிக்கையை பரிசீலித்த சிட்னி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனுஷ்க குணதிலகவை புதிய வீட்டில் குடியேற அனுமதித்துள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.