ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
வாகன வகைகளின் அடிப்படையில் விபத்துக்களை பகுப்பாய்வு செய்ததில், அதிகபட்சமாக 16 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் 4 முச்சக்கரவண்டிகள், 4 வேன்கள், 2 கார்கள், 2 கெப் வாகனங்கள், 2 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் என்பன இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல், 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினங்களில் 25 விபத்துக்களும் 26 மரணங்களும் பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடம் அந்த எண்ணிக்கை 19 ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே பிரதான காரணம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.