மட்டக்களப்பில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு

 

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை அடைவதற்காக பலவகையான உதவிகளை இலங்கை பூராகவும் ஆற்றிவரும் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கனடா – கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், இலங்கை நிர்வாக சேவை (விசேட தரம்) ஓய்வு நிலை அதிகாரியுமான மா.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விபயிலும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சை ஆயத்திற்கான கருத்தரங்காக இது அமைந்துள்ளது. வாகரை தொடக்கம் செங்கலடி வரையான பாடசாலைகளைச் சேர்ந்த 250 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

இக்கருத்தரங்கிற்கான நிதி அனுசரணையினை கனடாவின் ‘போக்கஸ் கிளீனிங்’ (Focus Cleaning ) நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“சிலரது கல்வி தோல்வியில் முடிந்து விட்டதாகக் கருதி தற்கொலைக் முயன்று விடுகின்றனர். அண்மைக் காலமாக இது அதிகரித்து வருகின்றது. தயவு செய்து ‘தன்நம்பிக்கையினை’ வளர்த்துக் கொள்ளுங்கள். ‘உங்கள் மீதான உங்களது நம்பிக்கை’ மட்டுமே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

பிறரின் கூற்றுக்களுக்காக மதிப்பளிப்பதை விட உங்கள் மீது நம்பிக்கை வைத்து முழுமையான கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறந்த பிரஜைகளாக மிளிர கனடாவின் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், ஏதிர்காலத்தில் தொடர்ந்தும் எமது நிறுவனம் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலே பங்களிப்பை வழங்கும் என்பதையம் மனமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்” என இதன்போது மாணவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், இலங்கை நிர்வாக சேவை (விசேட தரம்) ஓய்வு நிலை அதிகாரியுமான மா.தயாபரன் தெரிவித்திருந்தார்.