நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகல்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், சங்கத்தின் பொதுச்சபையினால் ஏகமனதாக 4 தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானங்கள் பின்வருமாறு:

நாட்டில் தற்போது நிலவும் கொலைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்றைய தினம் (16) அனைத்து சட்டத்தரணிகளும் தொழில்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருத்தல்.

இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் மற்றும் பொதுப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தல்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூகமயப்படுத்துவது அல்லது அவை உண்மை எனச் சித்தரிப்பது தொடர்பாக பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் அதிருப்தியை வெளியிடுதல்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டதுடன், இடவசதி இன்மை காரணமாகச் சிலர் Zoom தொழிநுட்பம் ஊடாக இணைந்துகொண்டதாக ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது, அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இக்கொலைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.