
தனிப்பட்ட புகைப்படங்களை பரப்புபவர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
காதல் உறவின் போது எடுக்கப்பட்ட அந்தரங்க மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த உறவு முறிந்த பிறகு மற்றவர்களை துன்புறுத்தும் சம்பவங்களை தடுக்க முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதன்முறையாக இத்தகைய குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனையும் அல்லது ஐந்து லட்சம் ரூபாவுக்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் இரண்டாவது முறை குறித்த குற்றத்தை புரிபவருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் இரட்டிப்பாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.