-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த சூரிய உலர்த்தியானது 50 வீதம் அரச நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டது.
குறித்த நிறுவனமானது செயற்கை இரசாயனமற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயிகளின் தானியங்களை கொள்வனவு செய்து அதிலிருந்து பல்வேறு விதமான உற்பத்தி பொருட்களை தயாரித்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வது மாத்திரமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனமானது நஞ்சற்ற உற்பத்திகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மூலப்பொருட்களான இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை கொள்வனவு செய்து உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கைலாயப்பிள்ளை சிவகரன், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் றோஹித்த பிரசாந்த, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் எந்திரி ரத்நாயக்க, காரைநகர் பிரதேச செயலர் ரஞ்சனா, மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி மௌலீஸ்வரன், கிராம சேவகர், பல்லுயிர் நிறுவனத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.






