மதுபானசாலை அனுமதி மோசடி தொடர்பில் விரைவில் வெளிப்படுத்தப்படும் – அரசாங்கம்
மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மதுபானசாலைக்கான அனுமதி வழங்குபோது இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.முதலில் விலைமனு தாரர்கள் தெரிவு செய்தல் மற்றும் விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படும்.
விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா? தூரத்துக்கு அமைய அந்த பகுதியில் மதுபானசாலை அமைக்க முடியுமா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படும்.
அரச அதிகாரிகளால் இந்த விடயங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றே நிதி அமைச்சின் செயலாளரினால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
எனினும், விலை மனுதாரர்களை தெரிவு செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள மோசடி குறித்தே அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் விலை மனுதாரர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
