-மஸ்கெலியா நிருபர்-
திம்புளை பத்தனை பொலிஸாரின் ஏற்பாட்டில் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் சமூக பொலிஸ் பாதுகாப்புக் குழு நியமிக்கப்படுவதற்கான சிறப்புக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது சமூகப் பொலிஸ் பாதுகாப்புக் குழுவிற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இலங்கை மலையக குருமார்கள் ஒன்றியத் தலைவரின் ஏற்பாட்டின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளுக்கு அவசியமான அப்பியாசப் புத்தகங்கள், புத்தகப் பைகள் என்பனவும், முதியவர்களுக்குத் தேவையான உடைகள் முதலகனவையும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் இராஜமணி பிரசாந்த், உபதலைவர் ஜேசுதாசன் யாஹுலமாரி, கௌரவ உறுப்பினர்கள் லெட்சுமணன், புஸ்பா விஸ்வநாதன், கணேசன் இராஜேந்திரன், மொஹமட் யூசுப்கான் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

