புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹைக்கூ கவியரங்கம் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
கவிஞர் ராதாமேத்தா குறித்த நிகழ்விற்கு தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றுகையில்,
“சங்க கால மரபுக்கவிதை இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதை மற்றும் நவீனத்துவக் கவிதை என்ற வழித்தடங்களில் பயணிக்கும் கவிதை உலகின் புதிய பரிமாண வளர்ச்சியாக ஹைக்கூ என்ற வடிவம் தமிழ் கவிதைத் துறையை ஆட்கொண்டது.
இவ் வடிவம் கீழ்திசை பெளத்த சிந்தனைகளில் முகிழ்ந்து சீனப் பண்பாட்டில் திளைத்து ஜப்பானிய அழகு பார்வையில் மலர்ந்த ஒன்றாகும் .
இதனை முதன் முதலாக 1916 ஆம் ஆண்டில் மகா கவி பாரதியார் ஹொக்கு எனத் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
இதன் சுவட்டில்1984 இல் தமிழகக் கவிஞர் அமுதபாரதி புள்ளிபூக்கள் என்ற பெயரில் தனது முதலாவது தமிழ் ஹைக்கூ நூலை வெளியிட்டார். இதுவே தமிழில் வந்த முதல் ஹைக்கூ நூலாகும்.
இவர்களது வழியில் நம்நாட்டில் சு.முரளிதரன் முதல் மற்றும் பலரும் தமது ஹைக்கூ நூலை வெளியிட்டுள்ளனர்
ஜப்பானிய விதிப்படி 5-7-5 என்ற வார்த்தை அடுக்கு வரைவிலகணத்தை இது கொண்டிருந்தாலும் தமிழில் வார்த்தை சுருக்கம் -வியப்பு மற்றும் அதிர்வை ஏற்படுத்தும் சொற் கட்டுகளை கொண்டு அமைந்துள்ளமையையும் நாம் அவதானிக்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகளை நேர்த்தியாக ஒப்பனை கற்பனை எதுவுமின்றி மூன்று வரிகளில் உணர்த்தி வைக்கும் அழகு இந்த வடிவத்திற்குரிய சிறப்பாகும்.
இந்த வகையில் முதன் முறையாக கொழும்பில் களம் கண்ட ஹைக்கூ கவியமர்வு சிறப்புக்கு உரியது ஆகும்.”என்றார்.





Beta feature
