இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 39°C முதல் 45°C வரை பதிவாகக்கூடும் என அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
நிலவும் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக குருநாகல் மாவட்டத்தில் 37.8°C பதிவாகியுள்ளது.
இந்தக் கடும் வெப்பம் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) வலியுறுத்தியுள்ளார்.
அதிக நேரம் வெப்பத்திற்கு முகம் கொடுப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைதல் (Dehydration), வெப்பப் பிடிப்பு மற்றும் வெப்பத்தாக்கம் (Heat Stroke) போன்ற நிலைமைகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.
வெளியே செல்லும் போது தொப்பி மற்றும் வெயில் கண்ணாடி (Sunglasses) அணிவது சிறந்தது.
மென்மையான நிறமுடைய, தளர்வான ஆடைகளை அணியவும்.
உடலில் நீர்ச்சத்தைப் பேண அடிக்கடி நீர் அருந்தவும்.
மயக்கம், அதிகப்படியான வியர்வை அல்லது அதீத சோர்வு ஏற்பட்டால் உடனடியாகக் குளிர்ந்த இடத்திற்குச் செல்லவும், பாதிப்புத் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.