தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்திற்கு வந்த காதலன்

இந்தியா-கர்நாடகாவில் திருமணத்திற்கு வந்த காதலனை பார்த்து மனம் மாறிய மணப்பெண், தாலி கட்டி கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கர்நாடகாவில் கொரடகெரே பகுதியில் உள்ள கோலாலா நகரில் ஒரு திருமணம் நடக்க இருந்தது.

தொட்டபல்லாபுரததை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடைபெறுவதாக குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்து முடிந்திருந்தது.

ஞாயிற்றுக் கிழமை காலை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரு வீட்டார் சார்பிலும் ஏராளமான உறவினர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

தாலி கட்டும் முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணமகன் தாலி கட்ட வந்த போது, மணப்பெண் தாலி கட்டிக்கொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இது குறித்து விளக்கமளித்த மணப்பெண் கடந்த சில ஆண்டுகளாக தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், தங்களது காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தான் காதலிக்கும் நபர் இந்த திருமணத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மணப்பெண் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் என்ன செய்தென்று தெரியாமல் திகைத்துப் பேய் நின்றுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மணப்பெண் மேஜர் என்பதால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக இந்த திருமணத்தை நடத்தி வைக்க முடியாது எனக் கூறியுள்ளனர். மேலும் தான் காதலித்த நபர் திருமணத்திற்கு வந்திருந்ததை பார்த்தவுடன் தான் மனம் மாறிவிட்டதாகவும் மணபெண் கூறியிருக்கிறார்.

இதையடுத்து மண்பெண்ணின் காதலனுடன் திருமணம் செய்து வைக்க பெண் வீட்டார் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், திருமணத்திற்கான மற்றொரு திகதியையும் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். மணமேடை வரை வந்து தாலி கட்ட முடியாமல் போன மணமகன் நொந்து போய் திரும்பியுள்ளார்.

இந்த திருமண சர்ச்சையால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.