கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி

-மன்னார் நிருபர்-

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடாக ‘கர்ப்பிணித் தாய்க்கு உத்தம பூஜா’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்பட்ட உலர் உணவு பொதியில் தரமற்ற அரிசி பகிர்ந்தளிக்க பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த கார்த்திகை மாதத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போசாக்கு உலர் உணவுப் பொருட்களை மன்னார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குறித்த 2 ஆயிரம் ரூபாய் பொதியில் 6 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, 1/2 கிலோ கடலை மற்றும் 1 மீன் டின் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றது.

எனினும் குறித்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்றதாக காணப்படுவதோடு, மன்னார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் சுகாதாரமற்ற முறையில் அரிசி களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அரிசி பயன்படுத்த முடியாத அளவில் வண்டுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறையிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியை வினவிய போது,

மன்னார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போசாக்கு உலர் உணவு பொதியில் வழங்கப்பட்ட அரிசி தொடர்பாக முறைப்பாடு முன் வைக்கப்பட்டது.

முறைப்பாட்டிற்கு அமைவாக பொது சுகாதார பரிசோதகர்கள் சென்று களஞ்சியசாலையை பார்வையிட்டனர்.

இதன் போது மக்களுக்கு வினியோகிக்க கூடிய வகையில் அங்கு அரிசி களஞ்சியப்படுத்தாமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி விநியோகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது, என அவர் மேலும் தெரிவித்தார்.