திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், பேராற்று வெளிப் பகுதியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜெசீல் சமீமா பர்வின் எழுதிய ‘இறகின் சிணுங்கள்’ எனும் கவிதை நூல் அண்மையில் வெளியானது. எனினும், ஒரு இளம் படைப்பாளியாக சமூக மற்றும் இலக்கியத் தளங்களில் அவர் படித்த பாடசாலையிலும் அவருக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச அங்கீகாரமோ அல்லது கௌரவமோ இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
கந்தளாய் பேராற்று வெளியைச் சேர்ந்த ஏ.எல். ஜெசீல் என்பவரின் புதல்வியான சமீமா பர்வின், தனது எழுத்தார்வத்தின் மூலம் உணர்வுகளையும் சமூகச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து ‘இறகின் சிணுங்கள்’எனும் நூலை எழுதியுள்ளார்.
“பெரிய நகரங்களில் உள்ள எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும், பாராட்டுக்களும் கிராமப்புறங்களிலிருந்து வரும் இளம் திறமையாளர்களுக்குக் ஏன் கிடைப்பதில்லை, பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஒரு நூலைப் படைத்தேன். ஆனால், உள்ளூர் மட்டத்திலோ அல்லது கலை-இலக்கிய அமைப்புகளிடமிருந்தோ தகுந்த வரவேற்பு கிடைக்காதது மனவேதனையளிக்கிறது. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினால் மட்டுமே எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத முடியும்,” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கந்தளாய் மண்ணிலிருந்து ஒரு பெண் எழுத்தாளர் உருவாவது அந்தப் பிரதேசத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும். எனவே, கந்தளாய் பிரதேச கலை, இலக்கிய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வந்து, இவரைப் போன்ற இளம் படைப்பாளிகளைக் கௌரவிப்பதோடு, அவர்களின் படைப்புகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.