கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில், காயமடைந்த நபர் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நபர் கந்தளாய் முதலாம் கொலனியை சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் முதலாம் கொலனி பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு திரும்ப முற்பட்டபோது , எதிரே வேகமாக வந்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் வீதி பாதுகாப்பு பொலிஸார் இல்லாத காரணத்தால், அண்மைக்காலமாக விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதனால் பொதுமக்கள் இந்த வீதியில் போக்குவரத்து ஒழுங்கமைப்பை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் வீதியில் பயணிக்க அச்சப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.