இந்திய வெளிவிவகார அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

-யாழ் நிருபர்-

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

பருத்தித்துறை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் நேற்றைய சந்திப்பின் போது விரிவாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பரப்பில் சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளை வினைத்திறனாக தொடர்ந்தும் மேற்கொள்வதன் ஊடாக, குறித்த விவகாரத்திற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை அடைய முடியுமென இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் நம்பிக்கை வெளியிட்டனர்.

அத்துடன் வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை அடிப்படையில் சில வேண்டுகோள்களை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பான சுமார் 23 கோரிக்கைளையும் முன்வைத்துள்ளார்.