யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் மர முந்திரிகை நாட்டப்பட்டிருந்த நிலையில் அக்காணியை பார்வையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் ஹொரவ்பொத்தான – பரங்கயாவாடிய- நபடவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான கே. சரோஜா (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யானையின் தாக்குதலினால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை ஹொரவ்பொத்தான திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.சீ.சுபஹான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இருந்த போதிலும் காட்டு யானைகளின் தொல்லையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

காட்டு யானைகளின் தொல்லை குறித்து வன ஜீவராசிகள் திணைக்கலை உத்தியோகத்தர்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பகுதியிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்