மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு 55 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய கணவன்!

வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட கணவர், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து, ரூ.55 கோடி சம்பாதித்துள்ளார்.

இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் 20 அடி தொலைவில் உள்ள மற்றொரு அறையில் வேலை செய்து வந்த மனைவியின் மொபைல் உரையாடலை ஒட்டுக்கேட்டு குறித்த நபர் பங்கு வர்த்தகம் செய்து பெரும் லாபம் சம்பாதித்துள்ளார்.

மனைவி பணிபுரியும் பிபி (BP Plc) நிறுவனம் டிராவல் சென்டர்ஸ் (TravelCenters of America) நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் போவதாக அவரது போனை ஒட்டுக்கேட்டதன் மூலம் தகவல் சேகரித்த கணவர் உடனடியாக டிராவல் சென்டர்ஸ் நிறுவனத்தில் 46,000 பங்குகளை வாங்கினார்.

இரண்டு நிறுவனங்களும் வாங்கியதை வெளிப்படுத்திய பிறகு, அவர் வாங்கிய பங்குகளின் மதிப்பில் 71% அதிகரித்ததைத் தவறாகப் பயன்படுத்தி, பங்குகளை வாங்கிய 10 நாட்களில் அவற்றை விற்றார். இதனால் அவருக்கு மிகப்பாரிய லாபம் கிடைத்துள்ளது.

இதில் அவருக்கு கிடைத்த லாபம் மட்டும் 1.76 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.55 கோடி ஆகும்.

பின்னர் இதுகுறித்து மனைவியிடம் கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் மனைவி.

மேலும், போனை ஒட்டுக்கேட்பதும், பங்குச்சந்தையில் டீல் செய்வதும் சட்டவிரோதமானது என குறித்த நபர் மீது அமெரிக்க செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு வழக்குப்பதிவு செய்துள்ளது.

இப்போது குறித்த நபர் தனது லாபத்தை அபராதத்துடன் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டார். ஃபெடரல் நீதிமன்றம் மே 17 அன்று கணவருக்கு தண்டனையை அறிவிக்கும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சட்டத்தின்படி, அத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $2,50,000 (இலங்கை பணமதிப்பில் ரூ 7.77 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும்.