பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் 13 பாடசாலைகள் பாதிப்பு

-பதுளை நிருபர்-

நுவரெலியா போக்குவரத்து சபையின் கீழ் இயங்கி வந்த இராகலையில் இருந்து ஹைய்பொரஸ்ட் வழியாக கோணபிட்டிய குட்வுட் வரையிலான பேருந்து சேவை அண்மைகாலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த வலயத்திற்குற்பட்ட,
வ/மாகுடுகல  த.வி
வ/ஹைய்பொரஸ்ட்  இல.1 த.வி
வ/ஹைய்பொரஸ்ட் இல 3 த.வி
வ/பிரம்லி த.வி
வ/அருனோதயா இந்து கல்லூரி
அல்மா  த.வி
சீட்டன் த.வி
ஹ/பாரதி த.வி
மெரிகோல்ட்  த.வி
பிரின்சஸ் த.ம.வி
எலமுல்ல  த.வி
நாமகள் கல்லூரி
கபரகல தமவி

ஆகிய பல பாடசாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பேருந்து சேவை காலை 7.00மணிக்கு இராகலையிலிருந்து புறப்பட்டு ஹைப்பொரஸ்ட் வழியாக 8.00 மணிக்கு கோணபிட்டிய குட்வுட் வரை சேவையில் ஈடுபட்டு வந்தது.

எனினும், இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டமையால் பாடசாலைகளுக்கு உரிய நேரத்திற்கு ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தர முடியாதன் காரணமாக மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

அத்தோடு ஆசிரியர்களும் போக்குவரத்துக்கு மாற்று வழிகளை பயன்படுத்துவதால் ஆசிரியர்கள் சிலர் நாள் ஒன்றுக்கு 1000/-  தொடக்கம் 1500/- வரை செலவு செய்வதோடு சிலர் பல கிலோ மீற்றர் தூரம் நடந்தும் செல்கின்றனர்.

இந்த போக்குவரத்து சேவை அடிக்கடி இடைநிறுத்தப் படுகின்றனர். அத்தோடு இந்த போக்குவரத்து சேவையினை முறையாக வழங்குமாறு ஆசிரியர்களால் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டன.

பல்வேறு கோரிக்கைகளும் பல்வேறு தரப்பினரிடம் விடுக்கப்பட்டும் பிரயோசனமில்லை. போராட்டம் அல்லது போக்குவரத்து சபையிடம் கோரிக்கை வைக்கும் போது,  “அடுத்து ஒரு வாரத்திற்கு மாத்திரம் பேருந்து சேவை இடம் பெறும், மீண்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும்”  இது வழமையான தொடர்கதையாகியுள்ளது.

தற்போது 4 மாதங்களாக இந்த பேருந்து சேவை முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் அதிகாரிகளும் பேருந்து பழுதாகியுள்ளது, ஓட்டுனர் இல்லை என பல சாக்குபோக்குகளை கூறுகின்றனர்.

அத்தோடு இப்பேருந்து சேவையை பெறும்பாலும் தமிழ் மொழி பாடசாலை என்பதால் போக்குவரத்து சபை அதிகாரிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதுமில்லை.

எனவே மலையகத்தில் இவ்வாறான கஷ்ட பிரதேச பாடசாலைக்கான கல்வியை சிறந்த ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழங்க மலையக அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் உடன் கவனம் செலுத்தி மீண்டும் முறையான பேருந்து சேவையை ஆரம்பித்தது நடாத்த முன் வரவேண்டும் என  அப் பகுதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்