புத்த பெருமானின் எச்சங்களுடன் இணைக்கப்பட்ட இரத்தினக்கல் தொகுதி ஏலத்திற்கு

நவீன யுகத்தின் மிகவும் வியப்பை ஏற்படுத்தும் தொல்பொருள் கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் புத்த பெருமானின் எச்சங்களுடன் இணைக்கப்பட்ட இரத்தினக்கல் தொகுதி ஒன்று எதிர்வரும் புதன் கிழமை ஹொங்கொங்கில் ஏலமிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1898 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள தூசி நிறைந்த மேட்டில் அகழ்வு செய்யப்பட்ட இந்த நினைவுச் சின்னங்கள், நூறு ஆண்டிற்கும் மேலாகப் பிரித்தானியத் தனியார் அரும்பொருள் சேகரிப்பு தரப்பினர் வசம் இருந்துள்ளது.

தற்போது, இவை அவற்றின் பாதுகாப்புக் காவலரினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் சுமார் 1,800 வகையான இரத்தினக் கற்களில் முத்துக்கள், மாணிக்கங்கள், புஷ்பராகங்கள், நீலக்கற்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட தங்கத் தாள்கள் என்பன உள்ளடங்குகின்றன.

வட இந்தியாவின் தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் புத்த பெருமான் அவதரித்ததாக நம்பப்படும் பகுதிக்கு அருகில் உள்ள செங்கல்லிலான அறையிலிருந்து அவை அகழ்ந்தெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புக்களுடன் புத்தரின் எலும்பு எச்சங்களும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இருந்த கலசத்தில் “புத்த பிரானுக்குச் சொந்தமானது” எனப் பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இவை சர்வதேச ரீதியாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளரை வியக்க வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எந்தக் காலத்திலும் மிகவும் அசாதாரண தொல்பொருள் கண்டுபிடிப்புக்களில் இது ஒன்று” என சோத்பி ஆசியாவின் தலைவரும், ஆசியத் தொல்பொருள் அமைப்பின் உலகளாவிய தலைவருமான நிக்கோலஸ் சோ (Nicolas Chow) தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புனிதமான கடந்த காலத்துடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த பொக்கிஷங்களை விற்பனை செய்வது நெறிமுறையாகக் கருத முடியுமா? எனப் பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.