பிரிவலை தடை முடிவிற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பிரிவலை என அழைக்கப்படும் நூல்வலை கலந்த தங்கூசி வலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

பெரிய கண் உடைய பிரிவலையை பயன்படுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் நண்டை மட்டும் பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டிருந்த நிலையில் நீரியல் வளத்திணைக்களத்தின் குறித்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த தொழிலையும் தடை செய்தால் வாழ்வாதாரத்திற்கு தாம் கையேந்த வேண்டிய நிலை உருவாகும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்

சமாசம் உட்பட வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியால் தடைப்பட்ட தொழில் தொடர்பில் அண்மையில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது

அக்கடிதத்தில் பிரிவலை உட்பட பலவகையான தொழில்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை என்றும் மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் பெரிய கண் உடைய பிரிவலையை பயன்படுத்தி நண்டு பிடிப்பது தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகும், என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க