பாடசாலை மாணவியை வன்புணர்ந்த 60 வயது முதியவர் உட்பட 2 பேர் கைது

மலையகத்தில் 13 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 40 வயதுடையவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது பல தடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை தெரியவந்துள்ளது .

இந்நிலையில் சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால்  , சட்ட வைத்திய அதிகார பரிசோதனைக்காக  கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் கைது  செய்யப்பட்ட இருவரையும்  அவர்களது குடும்பத்தினரையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு குறித்த தோட்ட தொழிலாளர்கள்  போராட்டமொன்றை  மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.