தொழிலதிபரின் வீட்டிலிருந்து 13.5 மில்லியன் மதிப்புள்ள இரு ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடிய இளம் பெண் கைது

கொழும்பில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டிலிருந்து சுமார் ரூ. 13.5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஆடம்பர கைக்கடிகாரங்களையும் 500 ஸ்டெர்லிங் பவுண்டுகளையும் திருடியதாகக் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்ட போது தலைமறைவாக இருந்த பெண் ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் என தெரியவருகின்றது.

சந்தேக நபர் தொழிலதிபரின் வீட்டில் வீட்டு உதவியாளராகப் பணியாற்றி வருவதாகவும், நான்கு மாத வேலையின் பின்னர் ஏப்ரல் 9 ஆம் திகதி விடுமுறையில் சென்றுள்ளதாகவும் கறுவாத்தோட்டம் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தநிலையில் வெளிநாட்டில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகள் விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 20 ஆம் திகதி மீண்டும் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி இருந்த போது , தொழிலதிபர் தனது பிள்ளைகளுக்கு பரிசாக விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை வழங்க முயன்றபோது, பொருட்கள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ,கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், விடுப்பில் சென்றிருந்த வீட்டுப் பணிப்பெண் வேலைக்குத் திரும்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.