
செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு
மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மகப்பேற்றுப் பிரிவு ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் வழிகாட்டலின் கீழ் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்திய வி.அற்புதன் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர்.கே.வசந்தராஜா, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா, செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை, பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் கே.வசந்தராஜா வழிகாட்டலின் கீழ் சுகப் பிரசவம் செய்யக் கூடிய சகல சாதக விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் இனி வரும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.