
இலங்கையில் உருவாகியுள்ள துப்பாக்கி குழுக்கள் : உயிரிழப்பவர்கள் யார்?
நாட்டில் இந்த ஆண்டு ஆரம்பமானதில் இருந்து இது வரையில் பதிவான துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடானது அனைவரையும் கதி கலங்க வைத்துள்ளது என கூறலாம்.
கொழும்பு – கல்கிசையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு துப்பாக்கிதாரிகள் 19 வயது இளைஞன் துரத்தி துரத்தி பொது வெளியில் சீ.சீ.ரி.வி கமராக்கள் இருந்தும் சுற்றிலும் மக்கள் கூட்டம் இருந்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பதிவில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
இந்த ஆண்டு நேற்று திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில் பதிவான 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 28 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.
இவற்றில், 28 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை, அவற்றில் 24 இறப்புகள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று சில தகவல் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஏழு மாதங்களில் தேடப்படும் 11 பாதாள உலக நபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மே மாதம் 3 ஆம் திகதி மீட்டியாகொடாவில் உள்ள உணவகம் அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு துப்பாக்கிதாரிகள் ரி – 56 துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் ஒருவர் உயிர் இழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மே மாதம் 4 ஆம் திகதி களுத்துறை, நாகோடாவில் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மே மாதம் 5 ஆம் திகதி அதிகாலையில் கல்கிஸ்ஸ கடற்கரை சாலையில் 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மே மாதம் 6ஆம் திகதி கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்தள்ளார்.
இந்த பின்னனியில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்ற நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துப்பாக்கிகளுடன் பல சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் சில திரைப்பட பாணியில் அமைந்திருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் கணேமுல்ல சஞ்சீவ மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கூறலாம்.
எது எவ்வாறாயினும் இவ்வாறான துப்பாக்கி பிரயோகங்களின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்புடையதாக நம்பப்படுகின்றது.
நம்மில் பலர் மீன்களை கூட கொலை செய்து எவ்வாறு உண்பது என்று சொல்வதை எல்லாம் கேட்டதுண்டு ஆனால் இப்போது சக மனிதனை மனிதாபிமானம் இன்றி படுகொலை செய்வதற்கான வன்மம் நிறைந்த சமூகமாக நம் சமூகம் உருவெடுத்து வருகின்றமை வேதனைக்குரியதாக காணப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்