UPDATE தென் கொரியா விமான விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிப்பு!

தென் கொரியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் குவாங்ஜு மற்றும் முவான் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் என தென் கொரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில், முவான் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கோருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த மூன்று தசாப்தங்களில் தென் கொரியாவில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்தாக இந்த விபத்து பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் இருந்து மீட்கப்பட்ட இரண்டு பணியாளர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று உள்ளூர் பொது சுகாதார மையத்தின் தலைவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான இந்த விமானம் 2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் பெரும்பாலானோர்கள் உயிரிழந்துவிட்டதாக தீயணைப்பு வீரர் ஒருவரை மேற்கோள்காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சக தரவுகளின்படி, 1997ஆம் ஆண்டு குவாமில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட விமான விபத்துக்குப் பிறகு, தென் கொரிய விமான நிறுவனத்தால் ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை கஜகஸ்தானின் அக்தாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது, இதில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் J2-8243, ரஷ்யாவின் தெற்கு செச்சினியா பிராந்தியத்தில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.