
மட்டக்களப்பு-வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கல்லூரி தினம்
-வாழைச்சேனை நிருபர்-
மட்.கல்குடா வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி குழு என்பன ஒன்றிணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடைபவனி நேற்று சனிக்கிழமை காலை கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகியது.
கல்குடா கல்வி வலயத்தில் முதற் தடவையக இவ் பாடசாலையிலேயே இந் நிகழ்வு நடைபெற்றது.
வழமைபோல் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் இறைவணக்கத்துடன் தேசிய கீதம், பாடசாலை கீதம் மற்றும் தமிழ் மொழி வாழ்த்து பாடல் என்பன பாடப்பட்டது.
இன்றைய நடைபவனி தினத்தினை முன்னிட்டு மரங்கன்றானது மைதான வளாகத்தினுள் நடப்பட்டு, கல்லூரியின் அதிபர் த.சந்திரலிங்கம் தலைமையில் அதிதிகளால் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் நடைபவனியில் பிரதேசத்தின் கலாச்சார நிகழ்வுகளான கோலாட்டம், கும்மி, கரகாட்டம், மயிலாட்டம் என்பன போன்ற நடனங்களும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களின் உருவம் தாங்கிய பதாதைகள் எடுத்து வரப்பட்டன.
விளையாட்டு அணியினர், சாரண இயக்க அணியினர், சுற்றாடல் முன்னோடிக் கழகம், கராத்தே அணியினர், மாணவர் சிப்பாய் படையணி, சென் ஜோன் அம்பியுலான்ஸ் முதலுதவி படையினர், மாணவர் தலைவர்கள், போதை பொருள் ஒழிப்பதற்கான ஊர்த்தி அணியினர், கல்லூரியின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமான விடயங்கள் இவ் நடை பவனியில் அமைந்திருந்தது.
பவனியானது வாழைச்சேனை பிரதான வீதி வழியாக விபுலானந்தர் சிலை சுற்றுவளைவு வரை சென்று, அங்கிருந்து முல்லை நகர் வீதி வழியாக விநாயகபுரம் விநாயகர் வித்தியாலத்தினை சென்றடைந்து, அங்கிருந்து பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தினை வந்தடைந்து, பின்னர் அங்கிருந்து கல்குடா வீதி வழியாக கல்லூரியினை சென்றடைந்தது.
பழைய மாணவர்கள் ஒவ்வொரு உயர்தர பிரிவுகளாக பங்கு பற்றி நீண்ட வரிசை கொண்ட வாகன தொடரணியாகவும் அமைந்திருந்தது.
மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்தினர், பாடசாலை அபிவிருத்தி குழவினர் என பலரும் ஆர்வத்துடன் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தனர்.
கல்லூரி தினமானது கடந்த ஒரு வார காலமாக நினைவு கூறப்பட்டு வருகிறது.பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட்ட மென்பந்து சுற்றுப்போட்டியும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பழைய மாணவர் சார்பில் பங்குபற்றியிருந்தார்.