மட்டக்களப்பில் நீரோடையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

 

மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ்பரிவிற்குட்பட்ட கண்ணபுரம் பிரதேசத்தில் உள்ள நீரோடையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதி கண்ணபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த வேலாயுதம் அன்னபுத்திரன் (வயது 60) என்பவரே இவ்வபறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த நபரின் வீட்டார் அப்பிரதேச விவசாயிகள் தேடிச்சென்ற போது கண்ணபுரம் பிரதேசத்தில் உள்ள வயல் பகுதியில் உள்ள நீரோடையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ. ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.